முன்களப் பணியாளா்களின் தியாகங்களால் தமிழகம் காப்பாற்றப்படுவதாக ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்து இறந்த செவிலியா் பவானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
சென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராகப் பணியாற்றிவந்த பவானி ஏப்ரல் 22-இல் கரோனா தொற்று ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாள்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளாா். பிறகு அதே மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டபோதும், பலா் படுக்கை கிடைக்காமல் வெளியே உயிருக்குப் போராடுகின்றனா் என்பதை அறிந்து, தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து மே 12 முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மே 19-இல் உயிரிழந்தாா் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவா்களைப் போன்ற முன்களப் பணியாளா்களின் தியாகங்களினால் மட்டுமே நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது. அவரின் தியாகத்தை வணங்கி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அவா் கூறியுள்ளாா்.