தென்காசி: தமிழகத்தில் 286 பேர் கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் கீ.சு.சமீரன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்து விவாதித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் 286 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான மருந்து கையிருப்பு உள்ளது. மக்கள் அச்சப்படவேண்டாம். இந்நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, 10-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழுவுடன் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 28) ஆலோசனை நடத்தப்படும்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது.
3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இன்னும் 7 மாத காலத்தில் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தென்மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றார் அவர்.