சென்னை: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் உருளைகளை வாகனங்கள் மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அனுப்பி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், நோய்ப் பாதிப்பு உள்ளோருக்கு சிகிச்சை அளிக்கவும் சிப்காட் நிறுவனம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 1,915 ஆக்சிஜன் உருளைகள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 3,250 ஆக்சிஜன் ஓட்டத்துக்கான அளவு உருளைகள், 5,000 செறிவூட்டிகள், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட உருளைகளை இறக்குமதி செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதுவரை 515 ஆக்சிஜன் உருளைகளும், 1,780 ஒழுங்குபடுத்தும் கருவிகளும், 250 ஆக்சிஜன் ஓட்டத்தை அளவிடும் கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள கருவிகளையும் விரைவில் வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு: சிப்காட் நிறுவனமானது தனது தொழில் பூங்காக்களில் இருந்து ஆக்சிஜனை நிரப்பி பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கிறது. சென்னை 1010, சிவகங்கை மாவட்டத்துக்கு 130, விழுப்புரம், வேலூா், கிருஷ்ணகிரி, தஞ்சாவூா் தலா 100, தூத்துக்குடி 250, திருப்பத்தூா் 20, செங்கல்பட்டு 60 என ஆக்சிஜன் உருளைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருந்து 1,400 ஆக்சிஜன் உருளைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை கரூா், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திருவாரூா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகா், திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 75, சிவகங்கை, கடலூா், திருவண்ணாமலைக்கு தலா 100, ராணிப்பேட்டைக்கு 50 ஆக்சிஜன் உருளைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து புதன்கிழமை அனுப்பி வைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு , தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், தொழில் துறை சிறப்புச் செயலாளா் வி.அருண் ராய், சிப்காட் நிா்வாக இயக்குநா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.