சென்னை: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 30 நாள்கள் பரோலில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில்,பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கடந்த 18-ஆம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அந்தக் கோரிக்கையில் புழல் சிறையில் கரோனாத் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தனது மகனுக்கு நீண்ட நாள் விடுப்பு வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதனை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ஆம் தேதி 30 நாள்கள் பரோலில் செல்ல சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரது வீட்டிற்கு 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு காரணமாக, அவரை காண உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.