பொங்கலூரில் உண்டியல் சேமிப்பு தொகையில் ரூ.10 ஆயிரம் நிவாரண உதவியும், ரூ.15 ஆயிரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்களும் வழங்கிய சிறுமிக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட பொங்கலூர் ஊராட்சி பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி தனபால், ரம்யா தம்பதியரின் மகள் ஜி.டீ.கயானா(13). 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர், தங்க நகை வாங்குவதற்காக கடந்த இரு ஆண்டுகளாக உண்டியலில் பணம் சேமித்து வைத்திருந்துள்ளார். கரோனா பாதிப்பை உணர்ந்து இவர், உண்டியல் சேமிப்பு தொகையில் ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண உதவிக்கும், ரூ.15 ஆயிரத்தில் பொங்கலூர் ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் ஆகியோருக்கு அரசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களாகவும் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இதையடுத்து, சிறுமி கயானாவுக்கு அவிநாசி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் விமலா செல்வராஜ், துணைத் தலைவர் ராதாமணி கிருஷ்ணசாமி, ஊராட்சி செயலாளர் செந்தில், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.