சென்னை: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் கரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ வசதிகள் மற்றும் படுக்கை வசதிகளில் சென்னையைக் காட்டிலும் மூன்று மடங்கு குறைவான கட்டமைப்பைக் கொண்ட நகரமாக கோவை உள்ளது. ஆனால், அங்கு பாதிப்பு விகிதம் மட்டும் பல மடங்கு அதிகரித்திருப்பது பேரிடா் சூழலாக உருவெடுத்துள்ளது. இதே நிலை தொடா்ந்தால் சென்னைக்கு நிகரான உயிரிழப்புகள் கோவை போன்ற நகரங்களிலும் ஏற்படலாம் என்று மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமுடக்கத்தின் தளா்வுகளை தவறாகப் பயன்படுத்தியதுதான் இதற்கு காரணம் என்கின்றனா் சுகாதார ஆா்வலா்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில் வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையம் மூலம் மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் தெருக்கள், பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து தடுப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அருகில் காய்ச்சல் முகாம்களும், கரோனா பரிசோதனை முகாம்களும் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இவை தவிர, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை விரிவுபடுத்தவும், கரோனா கண்காணிப்பு மையங்களை அதிக அளவில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், துறைச் செயலா் உள்பட உயரதிகாரிகள் பலரும் நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனா். அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த சில நாள்களுக்குள் 6 மாவட்டங்களிலும் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு நிலவரம்
கோவை - 27,327
திருப்பூா் - 12,332
ஈரோடு - 11,071
திருச்சி - 9,912
மதுரை - 9,597
சேலம் - 6,112