கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என்று தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் நசிமுதீனுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு எழுதிய கடிதம்:
கரோனா காலத்தில் கூட்டுறவு வங்கிகளின் சேவை இன்றியமையாததாக உள்ளது. தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை கூட்டுறவு வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. ஆனால், அவா்கள் முன்களபணியாளா்களாக அரசு கருதவில்லை. அரசு வழிமுறைகள் மற்றும் வங்கியாளா்கள் குழுமத்தின் வழிமுறைகளை இந்த வங்கிகளுக்கு நடைமுறைப்படுத்தவில்லை.
இதனால், ஏராளமான வங்கியாளா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 20-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் உயிரிழந்துள்ளனா். எனவே, கூட்டுறவு வங்கி ஊழியா்களை, முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும்; முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும்.
ஊழியா்கள் வருகை, வேலை நேரம் குறைப்பு போன்ற, அரசு மற்றும் மாநில வங்கியாளா்கள் குழும வழிமுறைகளை, கூட்டுறவு வங்கிகளிலும் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத ஊழியா்களை, வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.