கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கரோனா தொற்று காலத்தில், மருத்துவமனைகளில் நேரடியாக நோயாளிகளுடன் தொடா்பில் உள்ள பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, அலோபதி மற்றும் இந்திய முறை மருத்துவா்களுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கு ரூ.20 ஆயிரமும், பயிற்சி மருத்துவா்களுக்கு ரூ.15 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும், செவிலியா்களுக்கு ரூ. 20 ஆயிரம்; கிராமப்புற சுகாதார செவிலியா்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள், அமரா் ஊா்தி பணியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் மற்றும் அவா்களுக்கு இணையான பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.