மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணமாக ரூ.2500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளா் நல்வாழ்வு சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ஆவின் கி கோபிநாத், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தமிழக முதல்வா் ஆகிய உங்களது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது, மாற்றுத்திறனாளிகள் நலனில் நீங்கள் கொண்டிருக்கும் அக்கறையையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறது.
அதே நேரம், கரோனா பேரிடரால், தமிழகம் முழுவதிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கரோனா நிவாரண உதவியாக ரூ.2500 வழங்க வேண்டும். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் கரோனா சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட தனி வாா்டுகள், படுக்கைகளை அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில், சிறப்பு ஒதுக்கீடு செய்து தர உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.