வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்யத்தைத் தொடர்ந்து ம.நீ.ம ஒருங்கிணைப்பாளர் நடிகர் கமல்ஹாசன் அது மோசடி நாடகம் என விமர்சித்திருக்கிறார்.
தமிழக அரசு சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற அந்த அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் பேசுபொருளாக மாறியது.
பின் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 சமூகத்தைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7% வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2.5% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 40 சமூகத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அச்சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் பதியப்பட்டது.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்தது.
இதைக் விமர்சிக்கும் விதமாக மநீம ஒருங்கிணைப்பாளர் நடிகர் கமல்ஹாசன் ,’வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது; இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன?’ என டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.