கிண்டி, மடுவின்கரை சென்னை மாநகராட்சிப் பள்ளியில் இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவச் செல்வங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.
மிக நீண்ட நாளைக்குப் பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது அனைவரின் கடமை. எனவே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் நேசமுடன் மாணவர்களை வரவேற்க தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவச் செல்வங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மு.க.ஸ்டாலின், வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைத்து, பின்னர், மடுவின்கரை சென்னை மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்றார். அங்கு மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த மாணவச் செல்வங்களை முதல்வர் நேரில் சென்று, அன்புடன் வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி உரையாடினார்.
மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாடிய முதல்வர், கல்வியில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.