தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை (நவ.6) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்கெனவே நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 6-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால், தீபாவளி பண்டிகைக்காக தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு குழந்தைகளுடன் சொந்த ஊர் செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நன்றி வரவேற்பு
வெளியூர் சென்று விழாக்களை சிறப்பாக கொண்டாடும் வகையில் விடுமுறை வழங்கிய தமிழக முதல்வருக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தினரும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினரும் நன்றியினையும் வரவேற்பினையும் தெரிவித்துள்ளனர்.