கம்பம்: மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் உள்ள குரங்குகளுக்கு உணவிட்டு அதை வளைதளத்தில் பதிவேற்றம் செய்த இருவருக்கு கூடலூர் வனச்சரகத்தினர் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர்கள் நிக்கி எஸ் லார்ட்(34), இவரது நண்பர் ஜான்மேத்யூ(28) ஆகிய இருவரும் தேனிக்கு வந்தனர். வரும் வழியில் யோலர்கேம்ப் இரச்சல் பாலத்தில் காரை நிறுத்தினர். அப்போது அங்கிருந்த குரங்குகளுக்கு பழங்களை கொடுத்து குரங்குகளுடன் விடியோ எடுத்து யூ-டியூப், முகநூல், இன்ஸ்டாகிராம், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
இது பற்றிய தகவல் புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்துக்கு தகவல் கிடைத்ததன் பேரில் கூடலூர் வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருவருக்கும் ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனர், குற்றவாளிகள் இருவரும் பணத்தை செலுத்தி, வளைதளங்களில் பதிவேற்றம் செய்ததை அகற்றம் செய்தனர்.