டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை தொடரும்

டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. 
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

சென்னை: டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதுதவிர, தென் தமிழகத்தை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை தொடரும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (நவ.4) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 

நவ.5: நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.6: டெல்டா மாவட்டங்கள், கடலூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

நவ.7: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

நவ.8: டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.6-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்.

நவ.6, 7 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல், வடக்கு கேரளம் மற்றும் கா்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நவ.8 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.8-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com