தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியையும் குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க | முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர்கள் ஆய்வு
பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தோல்வியைத் தழுவியதால்தான் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | இன்று கனமழை பெய்யும் 10 மாவட்டங்களில் உங்கள் ஊர் இருக்கிறதா?
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டதை போல் தமிழகத்திலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.