வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தூக்கில் தொங்கிய பெண் சடலத்தை மீட்ட வாழப்பாடி காவல்துறையினர், அது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் மனைவி தனபாக்கியம் (60).குடும்பத்துடன் பேளூரில் வசித்து வந்தார். துக்கியாம்பாளையத்தில் கிரானைட் கற்கள் அறுக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த இவரது மகன் ஜெய்சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன் கரோனா தொற்று பாதித்த நிலையில் பலியானார்.
இவரது மனைவி சத்யா அண்மையில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இதற்கிடையே, சத்யாவிற்கும், தனபாக்கியம் மற்றும் இவரது மற்றொரு மகன் ரமேஷ்குமாருக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கிரானைட் தொழிற்சாலையில் தங்கியிருந்த தனபாக்கியம், வெள்ளிக்கிழமை காலை அங்குள்ள கூரை வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்து இவரது மகன் ரமேஷ்குமார் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி காவலர்கள், தனபாக்கியம் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ்குமார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, தனபாக்கியம் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.