எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், இப்பகுதியில் உள்ள நெல் வயல்கள் மழைநீரில் மூழ்கியது.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பூலாம்பட்டி,கூடக் கல், குப்பனூர், கோனேரிப்பட்டி, நெடுங்குளம், சிலுவம்பாளையம் உள்ளிட்ட காவிரிப் பாசன பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை கொட்டியது, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
விவசாய நிலங்களில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்.
இதில் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை கரும்பு நெல் உள்ளிட்ட பயிர்வகைகள் மழை நீரில் மூழ்கியது. குறிப்பாக பூலாம்பட்டி முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் நெல் நடவு செய்யப்பட்டிருந்த வயல்களில் அதிகப்படியான மழை நீர் தேங்கியதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை உள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து அடுத்து வரும் நாள்களிலும் மழை பொழிவு தொடரும் நிலையில், காவிரி பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிவிடும் அபாயகரமான சூழல் இப்பகுதியில் நிலவி வருவதாக காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயிகள் தெரிவித்தனர்.