திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில், சோழவரம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மழை அளவு அதிகம் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை மாலை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமையும் விடாமல் மழை பெய்தது. இதேபோல், திருவள்ளூர், பேரம்பாக்கம், கடம்பத்தூர், பூண்டி, வேப்பம்பட்டு, ஈக்காடு, தாமரைப்பாக்கம், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், ஏரிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால், விவசாய கிணறுகளிலும் நீர் ஆதாரம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மி.மீட்டரில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு. சோழவரம்-93, கும்மிடிப்பூண்டி-86, செங்குன்றம்-73, ஊத்துக்கோட்டை-50, தாமரைபாக்கம்-48, பொன்னேரி-46, பூந்தமல்லி, திருத்தணி தலா-45, பள்ளிப்பட்டு-37, திருவள்ளூர், திருவாலங்காடு தலா-36, பூண்டி-34, ஜமீன்கொரட்டூர்-26, ஆர்.கே. பேட்டை-25 என மொத்தம் 680 மி.மீ, சராசரியாக 48.57 மி.மீ எனவும் மழை அளவு பதிவாகியுள்ளது.