மதுரை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டிப் பள்ளிகளை மூடுவதையும் அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதையும் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 14-வது மாவட்ட மாநாடு நவ. 7-ல் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில் சேர்மத்தாய் வாசன் கல்லூரிப் பேராசிரியர் எம். கவிதா தலைமை வகித்துப் பேசினார்.
நாடார் வித்யாசாலை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் காந்திபாய் முன்னிலை வகித்தார். கிளைச் செயலர் சி. இந்திரா வரவேற்புரை வழங்கினார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி முனைவர் என். சிவசுப்ரமணியம் துவக்க உரையாற்றும்போது, அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து பாய்ச்சல் வேகத்தில் செல்கிறது என்றும் தற்போது பயன்படுத்தப்படும் வைஃபி முறை விரைவில் லைஃபி என்ற ஒளி வேகத்தில் செல்லும் தகவல் தொழில்நுட்பம் வரவிருக்கிறது என்றும் நியூட்ரினோ போன்ற புதுமை ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு அசுர வளர்ச்சி பெற்று வருகிறதென்றும் இதன் மூலம் மருத்துவத் துறையில் மனிதர்களின் விபத்து, திடீர் மரண நோய்கள் விஷயத்தில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்கெனவே பதிவு செயப்பட்ட தரவுகள் மூலம் விரைவில் சிகிச்சை செய்து காப்பாறற முடியும் எனத் தெரிவித்தார்.
மாநிலத் தலைவர் முனைவர் தினகரன் பேசும்போது, காடுகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் தற்போது உயர்ந்து வரும் புவி வெப்பமயமாதலுக்கு எதிரானது என்றும் பருவ காலக் கொள்கைகளுக்கு முரணானது எனப் பேசினார்.
எஸ்விஎஸ் உணவு நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.வி. சூரஜ் சுந்தர் சங்கர் வாழ்த்துரை வழங்கினார்.
இதை தொடர்ந்து, அகில இந்திய அறிவியல் இயக்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேரா.இராஜமாணிக்கம் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழ்நாடு அரசு நிராகரித்ததற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களில் யுஜிசி மூலம் நேரடியாக இக் கொள்கையை அமல்படுத்துவதைக் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மாநாட்டில் பள்ளிகளை மூடக் கூடாது என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்:
மாநாட்டின் நிறைவாக அலுவலகச் செயலர் காமேஷ் நன்றி கூறினார்.எதிர்வரும் இரண்டு வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவராக பேரா. எம். ராஜேஷ், செயலாளராக கு. மலர்ச்செல்வி பொருளாளராக சிவராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.