தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொளத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
அப்போது செய்தியாளர் சந்திப்பின்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள தி. நகரில் தண்ணீர் தேங்கியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 'தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளார்கள். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றும் பணிகள் முறையாக நடைபெறவில்லை. ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு