மதுரை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களின் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யக் கோரிய மனுவின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபரிடம், அவரது சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யவும், அதை, இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அறங்காவலர்களுக்கு ஊதியம் ஏதும் கொடுப்பதில்லை. மனுதாரர் குறிப்பிடும் அனைத்து தகவலும் இடம்பெறும் வகையில் விண்ணப்ப மனு வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பப் படிவம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நீதிபதிகள், அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர், அரசியல் கட்சியைச் சேர்ந்தவரா? வீடு உள்ளதா? போன்ற விவரங்களை ஏன் கேட்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் .