திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 2137 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு தேவையான உணவு மற்றும் நிவாரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் அவர் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் அதிகம் பாதிக்கும் மாவட்டமாகவும் அறிவித்துள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னதாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை மீட்பதற்கு துறை அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் படகுகள் மூலம் மீட்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்களை தங்க வைப்பதற்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் இந்த மாவட்டத்தில் 41 முகாம்களில் ஆண்கள்- 720, பெண்கள்-866, குழந்தைகள் 551 என மொத்தம் 2137 பேர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் கோரப்பாய், ஜமுக்களம் ஆகியவைகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டது.
மேலும் முகாம்களில் தங்க வைத்துள்ளோருக்கு மழைக்கால நோயால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மருத்துவ பரிசோதனையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.