பொன்னேரி: பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெள்ளிக்கிழமை கரை உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் அணையில் இருந்து 17 ஆயிரம் கன அடி உபரி நீர் ஆரணி ஆற்றில் வியாழக்கிழமை மாலை திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி பகுதியை கடந்து பழவேற்காடு ஏரிக்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில்,பொன்னேரி அருகே உள்ள கொரஞ்சூர் ரெட்டிப்பாளையம், பெரும்பேடு குப்பம் ஆகிய இரண்டு ஊர்களில் ஆற்றின் கரைகள் உடைந்து, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.
தகவலறிந்த வருவாய் துறையினர் அங்கு சென்று அப்பகுதியில் வசித்த பொதுமக்களை, பேருந்துகளில் அழைத்து வந்து பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
ஆற்றின் கரைகளின் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் ழூழ்கின.
உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில், உள்ளூர் மக்களுடன் இணைந்து பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரணி ஆற்றில், பெரும்பேடு குப்பம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் செல்கிறது.