ஊத்துக்கோட்டை அருகே மழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட கிராமத்திற்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் படகு போக்குவரத்தை துவக்கி நிவாரண உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி அடுத்த மங்களம் ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மங்களம் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு 15 கிமீ சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஆற்றில் வெள்ளம் குறையும் வகையில் மக்கள் பயன்பாட்டிற்காக படகுப் போக்குவரத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.
மேலும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் 500க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
முன்னதாக மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். மேலும் ஒன்றியச் செயலாளர்கள் மணி பாலன், சந்திரசேகர், வழக்கறிஞர் ஸ்ரீதர் முன்னாள் கவுன்சிலர் கரிகாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
நீண்ட நாளாக தரைப்பாலம் இல்லாததால் பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினரிடம் பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.