தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் பாலம் வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை, அடக்கம் செய்ய இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 5, மற்றும் 6 ஆவது வார்டு பகுதியில் உள்ள பெல்ஜியம் காலனி, லூர்துநகர், பாரதிபுரம், கவுண்டம்பாளையம், நாகியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்து விட்டால் கோனேரிப்பட்டியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம்.
மழை காலங்களில், சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆற்றை கடக்க முடியாமல், தம்மம்பட்டி பேருந்து நிலையம் வழியாக 10 கி.மீ தூரம் சென்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
இதனிடையே கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டுமென, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக, அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லையென கூறப்படுகிறது. இதனிடையே பெல்ஜியம் காலனி பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இன்று அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்தபடி ஆற்றை கடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அவலத்தைப் போக்கிட, கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே பாலம் அமைத்து தரவேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.