மீனவர்கள் பிரச்னை தீர்க்க இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: தேசிய மீனவர் பேரவை தலைவர் வலியுறுத்தல்

மீனவர்கள் பிரச்னை தீர்க்க இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை, மத்திய அரசு, தமிழக, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை தலைவர் வலியுறுத்தினார். 
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த, தேசிய மீனவர் பேரவைத் தலைவர்மா. இளங்கோவன்.
புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த, தேசிய மீனவர் பேரவைத் தலைவர்மா. இளங்கோவன்.


புதுச்சேரி: மீனவர்கள் பிரச்னை தீர்க்க இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை, மத்திய அரசு, தமிழக, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை தலைவர் வலியுறுத்தினார். 

இதுகுறித்து புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த, தேசிய மீனவர் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. இளங்கோவன் கூறியதாவது:

இந்திய கடலோரப் பகுதிகளில் கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்து வந்த நிலையில், அண்மைக்காலமாக மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வகையில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து அவர்கள் படகுகளை பறிமுதல் செய்தது தொடர்பான வழக்கில் 23 மீனவர்களுக்கும் ஓராண்டு தண்டனை விதித்தும், எச்சரிக்கை விடுத்ததோடு அவர்கள் படகுகளும் பறிமுதல் செய்துள்ளனர். அதில், மீனவர்கள் மட்டும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அக்டோபர் 18 ஆம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் படகை விரட்டி அடித்ததில் மீனவர் உயிரிழந்த சம்பவத்திலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தில்லியில் உள்ள மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபலா, இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரை, நேரில் சந்தித்து, மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

இது தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சவின் செயலர் செந்தில் தொண்டைமான், அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரிக்கு வந்தபோதும் அவர்களிடமும் வலியுறுத்தினேன்.

இதன் பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனினும் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை உடனே விடுவிக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்கள் சுமூகமாக தொழிலை மேற்கொள்வதற்கு, இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை, மத்திய அரசு, தமிழக, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com