வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னைக்கு வடகிழக்கே 310 கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியின் நகர மற்றும் கிராமப்பகுதிகளில் காலை 10 மணி முதல் தொடர்ந்து தற்போது வரை கனமழையாக பெய்து வருவதால், நகர பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் மீண்டும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. புதுச்சேரி பாவணன் நகர், ரெயின்போ நகர், எழில் நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வெளியே வர முடியாமல், நகரப் பகுதிகளிலும் வரும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது கடல் பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டு கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் அனைத்து படகுகளையும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.