காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளம் தொடர்மழையால் வியாழக்கிழமை முழுவதுமாக நிரம்பியிருக்கிறது.
பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பெருவிழாவான அத்திவரதர் விழா இக்கோயிலில் நடைபெறுவது வழக்கம்.
இவ்விழாவின்போது அத்திவரதரை கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து எழுந்தருளச் செய்து 48 நாட்களுக்கு பொதுமக்கள் தரிசனத்துக்குப் பின்னர் மீண்டும் அதே திருக்குளத்தில் எழுந்தருளச் செய்து வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இத்திருவிழாவின்போது ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக அத்திவரதர் எழுந்தருளியுள்ள அனந்தசரஸ் திருக்குளம் கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் நிரம்பி முழுக் கொள்ளவை எட்டியிருக்கிறது. தமிழகம் மட்டுமில்லாது வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் பலரும் இத்திருக்குளத்தை பார்வையிட்டு புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.