தமிழ்நாடு அரசு கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் சிவகாசி மற்றும் விருதுநகர் சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த கிராம செவிலியர்கள் வியாழக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செவிலியர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கரோனா தடுப்பூசி மருந்து எடுத்துச் செல்ல வாகன வசதி செய்து தரவேண்டும், வீடுவீடாக தடுப்பூசி பணிக்குச் செல்பவர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும், தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆன்லைன் மூலம் என்ட்ரி போடுவதற்கு தனியே ஆட்களை நியமிக்க வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருந்து பெறும் நேரத்தை 7 மணியாக இருக்கும் நிலையில் 9 மணியாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100 செவிலியர்கள் சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில் சங்க மாநிலத் தலைவர் அந்தோணியம்மாள், மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடம் போராட்டம் நடத்திவிட்டு பின்னர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.