திருச்சி: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஐஜேகே கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார் பெரம்பலூர் எம்பியும், இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐஜேகே) நிறுவனர் தலைவருமான டி. ஆர். பாரிவேந்தர்.
திருச்சி எஸ்.ஆர்.எம். விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கோயில்கள், தேவாலயங்கள், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு என மொத்தம் ரூ. 66 லட்சத்தில் நிதியுதவிகளை வழங்கி மேலும் கூறியது:
பதவியிலிருக்கும்போது ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் பதவிக்காலம் முடிந்த பயத்துடன் உள்ளனர். ஊழலற்று நிர்வாகம் செய்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.
தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் எங்களுக்கு பகையோ உறவோ ஏதுமில்லை. நடுநிலையாக உள்ளோம். என்றாலும் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்றார் அவர். பெரம்பலூர் தொகுதி எம்பியான இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.