சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதிய தனித்தோ்வா்களுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவா்களின் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் தனித்தோ்வா்களுக்கு 10-ம் வகுப்பு தோ்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு செப்டம்பா் 16 முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தோ்வின் முடிவுகள் நவ.19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். தோ்வா்கள் இணையதள முகவரியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தோ்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நவ.22, 23 ஆகிய இரு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.