கோவில்பட்டி: மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதற்கான சட்டம் திரும்பப் பெறப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். இதில் தமிழ் விவசாயிகள் சங்க கயத்தாறு ஒன்றிய தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய செயலர் தெய்வேந்திரன், கட்டுமான சங்க நகரச் செயலர் அந்தோணி செல்வம், ஒன்றிய செயலாளர் கணேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டத் தலைவர் மணி, காங்கிரஸ் கட்சியின் சேவாதள பிரிவு மாவட்ட தலைவர் சக்தி விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.