கடலூர்: கடந்த 19 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆற்றில் மொத்த கொள்ளளவான 1.05 லட்சம் கன அடிக்கு பதிலாக 1.20 லட்சம் கன அடி நீர் சென்றது. இதனால், மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 100 நகர் பகுதிகள், சுமார் 60 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது. சுமார் 2,400 வீடுகள் சேதமடைந்தன. 750 கால்நடைகள் உயிரிழந்தன.
வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் இன்று காலை கடலூர் வந்தனர். பெரிய கங்கணாங்குப்பத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், வெள்ளநீர் தேங்கியுள்ள தெருக்களையும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெள்ள சேத புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, புதுச்சத்திரம் அருகில் உள்ள பூவாலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்தியக் குழுவைச் சேர்ந்த பல்வேறு துறை அதிகாரிகளான விஜய் ராஜ்மோகன், ரஞ்சன் ஜாய் சிங், எம்.வி.என்.வரபிரசாத், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், சட்டப் பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.