வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும் அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இந்நிலையில் அரசின் இந்த சட்டத்திற்கு எதிராகவும் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்களான தீபா, தீபக் இருவரும் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்று கூறியதுடன், ஜெயலலிதா வாரிசுகள் என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் வேதா இல்லத்தின் சாவியை மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
முன்னதாக, 'வேதா இல்லம், மெரினாவில் பீனிக்ஸ் நினைவிடம் என ஜெயலலிதாவுக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வேதா இல்லத்திற்கு இழப்பீடாக, கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ 67.95 கோடி இழப்பீடுத் தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.