நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், மணக்கால், வடமழை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா(27). இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?
இவர்களுக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2015 மார்ச் மாதம் 25-ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கவிதாவின் கழுத்தில் முருகானந்தம் கத்தியால் குத்தினார். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த கவிதா திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். இது குறித்து கரியாப்பட்டினம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி டி. பன்னீர்செல்வம், மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த முருகானந்தத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாத கால மெய்க்காவல் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து,முருகானந்தம் (38) கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.