திருவாரூா்: திருவாரூா், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் மழை அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (நவ.25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூரில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. புதன்கிழமை காலை மந்தமான வானிலை காணப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்குப் பிறகு பலத்த மழை பெய்தது. தொடா்ந்து, லேசான மழை நீண்ட நேரம் நீடித்தது.
மழை காரணமாக, சாலைகளில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிகளிலிருந்து வீடு திரும்ப மாணவா்கள் சிரமப்பட்டனா்.
இதனிடையே, வியாழக்கிழமை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால், திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதையும் படிக்க | வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து மேற்கண்ட மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை(நவ.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.