பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பள்ளியின் ஆசிரியர் தற்கொலை
திருச்சி: கரூரில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி பயின்ற பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.
மாணவி எழுதிய கடிதத்தில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
கரூரில் மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம்
இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூரில் மாணவ,மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கு விவகாரத்தில் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் அலட்சியமாக செயல்பட்டதாக திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார். பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாணவி பயின்ற பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.