தமிழகத்தின் தியாக தீபங்கள் - 101: கே.ஏ.தர்மலிங்கம் 

ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் கே.ஏ.தர்மலிங்கம் 25-12-1919-இல் பிறந்தார். 1932-ஆம் ஆண்டு நாமக்கல்லில் ஜவாஹர்லால் நேரு, சத்தியமூர்த்தி ஆகியோரின் உரை கேட்க 16 மைல் நடந்தே சென்றுள்ளார்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 101: கே.ஏ.தர்மலிங்கம் 

ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் கே.ஏ.தர்மலிங்கம் 25-12-1919-இல் பிறந்தார். 1932-ஆம் ஆண்டு நாமக்கல்லில் ஜவாஹர்லால் நேரு, சத்தியமூர்த்தி ஆகியோரின் உரை கேட்க 16 மைல் நடந்தே சென்றுள்ளார்.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கேட்ட நாமக்கல் கவிஞரின் "தூங்காதே தமிழா... சுதந்திரச் சூரியன் உதிக்கும் நேரமிது' எனும் எழுச்சிமிகு பாடல் அவரைத் தட்டியெழுப்பியது.

அந்தக் காலகட்டம் அப்படி. "பூர்ண சுயராஜ்யம்' என்ற முழக்கம் நாடெங்குமிருந்த இளைஞர்களை விழிக்கச் செய்திருந்த நேரம். காந்தியடிகள் "தில்லி சலோ' என்ற முழக்கத்தை முன்வைத்து சத்தியாகிரகிகள் தனியாக தில்லி நோக்கி நடந்தே புறப்பட அறைகூவல் விடுத்தார்.

1941 பிப்ரவரி 14-இல் காட்டுப்புத்தூரிலிருந்து தனி நபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார் தர்மலிங்கம். தொட்டியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். எட்டு நாள்கள் சிறை வைக்கப்பட்டார். பின்னர் காடுவெட்டி பகுதியில் கைதாகி 15 நாள்கள் சிறையிலிருந்தார். 

விடுதலையான பிறகு மீண்டும் நடைப்பயணம். லால்குடியில் கைதாகி 30 நாள்கள் சிறை. இப்படி நடந்தே 250 மைல் தூரத்தைக் கடந்து சென்னையை அடைந்தார். அடுத்த நாள் ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தில்லி நோக்கிப் புறப்பட ஆயத்தமானபோது தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். 4 மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆந்திரத்தில் உள்ள அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் 1942 "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தலைமறைவாக இருந்து நடத்தும் பொறுப்பை ஏற்றார். தலைமையிலிருந்து வரும் ரகசியக் கடிதங்களை அடிப்படையாக வைத்து வேலைத் திட்டங்களை வகுத்து பல பகுதிகளில் "ஆகஸ்ட் போராட்டம்'  நடக்கக் காரணமாக இருந்தார்.

29-8-1943-இல் திருச்சி மணிக்கூண்டு பார்க்கில் 13-ஆவது அரசியல் மாநாட்டை நடத்த தர்மலிங்கம் பொறுப்பேற்றார். அடக்குமுறையும் கண்காணிப்பும் உச்சத்தில் இருந்த சூழலில் இம்மாநாட்டை மிகத் திறமையாக நடத்தி முடித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் என்ற முறையில் தர்மலிங்கம் நிகழ்த்திய உரை அன்று பிரதிநிதிகள் அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநாடு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இன்றளவும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவை அந்த மாநாட்டின் தனித்துவத்தைப் பறைசாற்றுகின்றன. இதில் "வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெறிகொண்டு அலைந்த போலீஸார் தர்மலிங்கத்தைக் கைது செய்தனர். கரூர் கிளைச் சிறையில் 12 நாள்களும் திருச்சி கிளைச் சிறையில் 78 நாள்களும் வைத்து விசாரித்தனர். பிறகு நீதிமன்றத்தால் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர், மாகாண காங்கிரஸ் உறுப்பினர், திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர்-தலைவர் எனப் பல பொறுப்புகள் வகித்துள்ளார்.

போராட்டம், விசாரணை, சிறை, மாநாடு என்று இயங்கிய தர்மலிங்கம் 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினரானார். இவர் 10-11-2003-இல் மறைந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com