அம்பாசமுத்திரம்: காரையார், சேர்வலாறு அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாபநாசம் கோவில் படித்துறை, கல்மண்டபம், பிள்ளையார் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது.
நெல்லை மாவட்டம், பாபநாசம் காரையார் அணை மற்றும் சேர்வலாறு அணைக்கு நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இரு அணைகளுக்கும் 17 ஆயிரம் கன அடி நீர்வரத்தும், இரு அணைகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாபநாசம் கோவில் படித்துறை, கல்மண்டபம், பிள்ளையார் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது.
தொடர்ந்து தாமிரவருணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்று அருகே செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.