சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்மாய் நிரம்பி உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.
இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாய் மூலம் ஏராளமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக இளையான்குடி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாத்தமங்கலம் கண்மாய் நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது.
இந்நிலையில் கண்மாய்க்கரை பலமாக இல்லாததால் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி கிராமத்துக்குள் புகுந்தது. இதனால் சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பல வீடுகள், கோயில்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இளையான்குடி ஒன்றியத்தில் பல கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் கரைகள் பலமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் உடைப்பு ஏற்படலாம் என்ற நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அரசுத் துறை நிர்வாகத்தினர் இளையான்குடி ஒன்றியத்தில் பலமில்லாத கண்மாய் கரைகளை கண்காணித்து உடைப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.