திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர் கனமழையால் திருநெல்வேலி நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
திருநெல்வேலி டவுனில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளின் அருகிலும் மழைநீர் அதிகம் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியேவந்து பார்த்த வண்ணம் உள்ளனர். அங்குள்ள குழந்தைகள் நீரில் குளித்து விளையாடி வரும் காட்சிகளைப் பார்க்கலாம்.