ராமேசுவரம்: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்வதால் நவ. 26 முதல் 29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதிலும் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளனர்.
இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.