காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தலையில்லா பெரும்பாக்கம் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக வீட்டில் சிக்கிக் கொண்ட வயதான தம்பதியரையும் அவர்களது 5 ஆடுகளையும் சனிக்கிழமை தீயணைப்புத்துறையினர் படகில் சென்று மீட்டனர்.
காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது தலையில்லா பெரும்பாக்கம் கிராமம். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கிராமத்தைச் சேர்ந்த பலராமன்(50) மற்றும் அவரது 50 வயதுடைய மனைவி இருவரும் அவர்களது வீட்டில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களது வளர்ப்பு ஆடுகளை விட்டுவிட்டு அவர்கள் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வர விரும்பாமல் அங்கேயே இருந்துள்ளனர். இத்தகவலை அருகிலிருந்தவர்கள் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு படகில் சென்று வயதான தம்பதியரையும் அவர்களது 5 வளர்ப்பு ஆடுகளையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தம்பதியரும் தீயணைப்புத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.