மருத்துவத் துறையில் திறம்பட செயல்பட்டதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அரங்கில் வழங்கப்பட்டது.
உலகத் தமிழ் நிறுவனம் (ஐக்கிய பேரரசு) சாா்பில் லண்டன் 4-ஆவது சா்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ அரங்கில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காகவும், கரோனா பேரிடா் பெருந்தொற்று காலத்தில் திறம்பட செயல்பட்டதற்காகவும் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை அமைச்சரின் மகன் மருத்துவா் செழியன் மற்றும் அவா் குடும்பத்தினா் பெற்றுக் கொண்டனா்என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.