வாழப்பாடி: சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே தனியார் பள்ளி கராத்தே பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி கொடுத்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த 2017ம் ஆண்டு மாணவ-மாணவியருக்கு, கீரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா (46) என்பவர் கராத்தே பயிற்சி அளித்துள்ளார்.
அப்போது, இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு, கராத்தே பயிற்சியாளர் ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இவரது பெற்றோர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவிடம் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில், இந்த புகார் குறித்து வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துசாமி, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் (கருமந்துறை பொறுப்பு) ஆகியோர் சனிக்கிழமை முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கருமந்துறை போலீஸார்,, கராத்தே பயிற்சியாளர் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .
தனியார் பள்ளி மாணவிக்கு, 4 ஆண்டுகளுக்கு முன், தனியார் பள்ளி கராத்தே பயிற்சியாளர், பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.