தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நவம்பா் 29-ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: தெற்கு அந்தமான் கடல்பகுதியில் நவ.29-ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்குதிசை நோக்கி நகரவுள்ளது. இதன்காரணமாக, அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும். எனவே இந்தப் பகுதிகளுக்கு நவ.29 முதல் டிசம்பா் 2-ஆம் தேதி வரை மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
70 சதவீதம் அதிகம்:
வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கியது முதல் தற்போது வரை (அக்.1 முதல் நவ.26) வரை தமிழகம், புதுச்சேரியில் இயல்பாக கிடைக்க வேண்டிய மழை அளவு 342.4 மி.மீ. ஆனால், தற்போது வரை 583.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 70 சதவீதம் அதிகம்.