திருச்சி: திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற 75 ஆவது ஆண்டு இந்திய சுதந்திர தின மாரத்தான் ஓட்டத்தை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார்.
நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 744 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம், மாநில விளையாட்டு ஆணையத்தின் மூலமாக சுதந்திர தின ஓட்டத்தை நடத்தி வருகிறது.
திருச்சி மாவட்ட நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து சனிக்கிழமை மாரத்தான் ஓட்டத்தை நடத்தின.
இதையும் படிக்க | நவ.1 பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அறிவிப்பு
ஆரோக்கியமான, தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க, அனைவரும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக இந்த ஓட்டம் நடைபெற்றது.
இந்த சுதந்திர தின ஓட்டத்தை, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பாக அமைந்து இருக்கும் உப்புசத்தியாகிரக நினைவு தூணிற்கு முன்பிருந்து பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, பாரதிதாசன் பல்கலைகழக துணை வேந்தர் எம்.செல்வம், பல்கலைகழக பதிவாளர் கோபிநாத், நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி அலுவலர் லட்சுமிபிரபா, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தபால்நிலையத்திலிருந்து ரயில்வே ஜங்சன் ரவுண்டானா, ரயில்வே மேம்பாலம். மன்னார்புரம் ரவுண்டானா, ஆட்சித்தலைவர் முகாம் அலுவலக சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைத்து.
இதில், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் .சுருதி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு நன்றி கூறினார்.