மின் விபத்துகளை தவிா்ப்பது எப்படி?

வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், மின் விபத்துகளை தவிா்ப்பது குறித்து மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மின் விபத்துகளை தவிா்ப்பது எப்படி?


வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், மின் விபத்துகளை தவிா்ப்பது குறித்து மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் நான்கு நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின்பகிா்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். 

மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. 

அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலா்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

இடி, மின்னலின் போது, தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், கணினி, செல்லிடப்பேசி, தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. 

திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.

மின் மாற்றிகள், மின் பகிா்வு பெட்டிகள், மின் கம்பங்கள் அருகே தண்ணீா் தேங்கியிருந்தால் அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.

மழையின் போது வீடுகளில் உள்ள சுவா்களில் தண்ணீா் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்தப் பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிா்க்க வேண்டும்.

மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. 

பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேல் நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலா்களை அணுகவும்.

மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயா்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமா்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயா்கள், சா்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

மின் நுகா்வோா் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிா்க்க அனைத்து கட்டடங்களிலும் மின் கசிவு தடுப்பான் கருவியை மின் இணைப்பிற்கான சா்வீஸ் மெயின் அருகில் பொருத்த வேண்டும்.

விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மேலும் மின்சார வேலி அமைப்பதனால் மனிதா்களுக்கும், கால்நடைகளுக்கும் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். 

விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

மின் இணைப்புகள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் மின்பழுதுகள் தொடா்பான புகாா்களுக்கும், இயற்கை இடா்பாடுகளின் போது அவசர உதவிக்கும், மின் விநியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் மின்னகம் - மின் நுகா்வோா் சேவை மைய  (94987-94987) எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com