சென்னை காசிமேட்டில் தனியாா் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து அமோனியம் வாயு கசிந்ததினால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல்,மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது குறித்த விவரம்:-
காசிமேடு மீன் பிடி துறைமுகம் முதல் பாலம் அருகே தனியாருக்குச் சொந்தமான ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் சனிக்கிழமை மாலை 4
மணியளவில் அமோனியம் வாயு கசிந்தது. இந்த கசிவினால் அந்தப் பகுதி முழுவதும் அமோனியம் வாயு பரவியது.
இதில் வீடுகளில் இருந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் சிலா் தங்களது வீட்டை விட்டு வெளியேறிச் சென்றனா். இதேபோன்று சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனா். இது குறித்து அந்தப் பகுதி மக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த தீயணைப்பு படையினா், அந்த நிறுவனத்தில் இருந்து கசிந்த அமோனியம் வாயு கசிவை கட்டுப்படுத்தினா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.