புதுக்கோட்டை: தனது மனைவி, மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(35). இவருடைய மனைவி சண்முகவள்ளி(31). இவர் தனது மனைவியை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்படி, கடந்த 2016 ஜூலை 3 ஆம் தேதி நடந்த தகராறில், மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் மருத்துவச் சிகிச்சையால் உயிர் பிழைத்தனர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்குரைஞர் த. அங்கவி ஆஜராகி வாதாடினார்.
வழக்கு விசாரணையின் நிறைவில், குற்றவாளி கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர். சத்யா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.